திருவள்ளூர்: திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றுகின்றவர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். தேவையில்லாமல் சுற்றுகின்றவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். கடந்த 15ம் தேதியில் இருந்து 7 தினங்களில் கொரோனா நோயை பரப்பும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சுற்றி திரிந்தவர்களின் மீது 1330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 1697 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு பொது இடங்களில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாமலும் முககவசம்அணியாமலும் காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரியும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.‘’பொதுமக்கள் தங்களை நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவேண்டும். அரசின் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி வீட்டிலேயே இருக்கவேண்டும். தேவையில்லாமல் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்’ என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகப்பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.